TamilBible.ai App
For offline reading and AI chat
Job 40 · 24 verses
1. பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரவாக:
2. சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்.
3. அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
4. இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
5. நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
6. அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
7. இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன், நீ எனக்கு உத்தரவுசொல்லு.
8. நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
9. தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?
10. இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
11. நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு,
12. பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து அவனைப் பணியப்பண்ணி துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
13. நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
14. அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி, நான் உன்னைப் புகழுவேன்.
15. இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
16. இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
17. அது தன் வாலை, கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
18. அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
19. அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
20. காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
21. அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும் உளையிலும் படுத்துக்கொள்ளும்.
22. தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்து கொள்ளும்.
23. இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
24. அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?
Switch chapter or book